Monday, May 22, 2017

போலீஸ் எழுத்து தேர்வு; 5.80 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும், நேற்று நடந்த, போலீஸ் எழுத்து தேர்வில், 5.80 லட்சம் பேர் பங்கேற்றனர். 

போலீஸ், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில், காலியாக உள்ள, காவலர் நிலையிலான, 15 ஆயிரத்து, 711 காலி பணி இடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், ஜனவரி, 23ல் அறிவிப்பு வெளியிட்டது. 

இதற்கு, 50 திருநங்கையர் உட்பட, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான எழுத்துத்தேர்வு, நேற்று மாநிலம் முழுவதும், 410 மையங்களில் நடந்தது; 5.80 லட்சம் பேர் எழுதினர். 52 ஆயிரம் தேர்வில் பங்கேற்கவில்லை. சென்னையில், 56 தேர்வு மையங்களில், 41 ஆயிரத்து, 35 பேர் தேர்வு எழுதினர். 

எத்திராஜ் கல்லுாரியில் தேர்வு எழுதியோரை, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பார்வையிட்டார்.கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் மற்றும் நிர்வாக பிரிவு துணை கமிஷனர் ராதிகா ஆகியோர் தலைமையில், கண்காணிப்பு பணி நடந்தது. 

மாவட்ட தலைநகரங்களில், ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,க்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.தேர்வின் போது, முறைகேடுகளில் ஈடுபட முற்பட்டதாக சிலர் பிடிபட்டாலும், கடுமையான எச்சரிக்கைக்கு பின், மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு எழுத வந்தோர், கடும் சோதனைக்கு பிறகே, மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.மொபைல் போன், பர்ஸ் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தாமதமாக வந்தோர், தேர்வு அறைக்குள் அனுமதிக்கப் படவில்லை. 

80 மதிப்பெண்களுக்கான இத்தேர்வு, நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கி, 11:20க்கு முடிந்தது. ’தேர்வு எளிதாகஇருந்தது’ என, தேர்வில் பங்கேற்றோர் கூறினர்.

சமூக பார்வை மாற வேண்டும் 

சென்னையில், தேர்வு எழுதிய, திருநங்கை துர்காஸ்ரீ கூறியதாவது:

போலீஸ், எஸ்.ஐ., தேர்வில் பிரித்திகா யாசினி என்ற திருநங்கை வெற்றி பெற்று, எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். அதேபோல, படித்த திருநங்கையர், போலீஸ் வேலையில் பணியாற்ற ஆர்வமாக உள்ளனர். 

திருநங்கையர் மீதான சமூக பார்வை மாற வேண்டும். போலீஸ் தேர்வில் கட்டாயம் வெற்றி பெறுவேன்; ஊக்கம் அளித்த போலீஸ் அதிகாரிகளுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment